இறையில்லம் நாடு! இறையின்பம் தேடு! | தினகரன் வாரமஞ்சரி

இறையில்லம் நாடு! இறையின்பம் தேடு!

இறையில்லம் கஃபாவை

இன்றே நீ நாடு

இறைகடமை ஹஜ்ஜதனால்

இறையின்பம் தேடு

கறையெண்ணம் கபடத்தை

கல்பிலிருந்து நீக்கு

முறையாக முதலோசனை

முழுமையாக நோக்கு

உள்ளமை அல்லாஹ்வை

உள்ளத்தால் உணர்ந்து கொள்ள

இல்லம் கஃபாவை

இயன்றளவு சுற்று

உள்ளத்து உணர்வுகள்

உன்னதமென்று காட்ட

வெள்ளாடை இஃறாமை

விரும்பி உடுத்துக் கொள்ளு!

மலை அரபா தரித்து

மறுமை மஹ்ஷரை

நிலையாக நெஞ்சத்தால்

நினைத்து நீ கொள்ளு

மலைபோன்ற பாவம் நீங்க

மனதாலே மன்றாடி

நிலையான ‘அல்லாஹ்’விடம்

நெஞ்சத்தால் கேளு!

தலைமுடி சிரைத்து நீ

தலைக்கணம் போக்கு

அலையலையாய் ஓடோடி

அவனையே நோக்கு

நிலையில்லை எதுவும்

நெஞ்சத்தால் நோக்கு

கலைத்துவமாய் வாழ்வை

கடைசிவரை ஆக்கு

குறைகொள்கை குப்ரினை

கொன்றொழித்து விட

நிறைவாக குர்பானை நீ

நிச்சயமாக கொடு

கறையெண்ணம் சைத்தான்

கல்பில் வராதிருக்க

கற்களை ஏறிந்தெறிந்து

கணப் பொழுதில் தடு

ஸம் ஸம் நீரருந்து – அது

சுகமளிக்கும் மாமருந்து

இறை வணக்கத்தால்

இன்ஸான் நீ திருந்து

இறைபரிசாய் இறைவனிடம்

உனக்கு கிடைக்கும் விருந்து

இறையின்பமாய் எந்நாளும் நீ

இதனை அருந்து!

Comments