ஊழலை எதிர்க்கும் அரசியல் ஆளுமையே மக்களின் எதிர்பார்ப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஊழலை எதிர்க்கும் அரசியல் ஆளுமையே மக்களின் எதிர்பார்ப்பு

ஊழலை எதிர்த்து ஜனநாயகத்தை மதிக்கின்ற சிறந்த அரசியல் ஆளுமையே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய செயற்பாட்டாளரான காலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தனவின் உருவச் சிலையை திறந்து வைக்கும் நிகழ்வு கடந்த 10 ஆம் திகதியன்று கந்தளாய் நகர மண்டபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

இலங்கை அரசியலில் சிறந்த பணிகளை மேற்கொண்டு, திருகோணமலை மாவட்ட மக்களுக்காக விரிவான சமூகப் பணிகளைச் செய்த மக்கள் தலைவரான எம்.கே.ஏ.டி.எஸ். குணவர்தன சிறந்த, நேர்மையான அரசியல் ஆளுமை கொண்டவர்.

ஊழலுக்கு எதிராக போராடிய அவர் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட்ட தலைவராவார்.

இவரைப்போன்ற நேர்மையான அரசியல் ஆளுமைகள் நாட்டுக்கு மிகவும் தேவையாகும். 2015 ஜனவரி 08ஆம் திகதி இடம்பெற்ற யுக புரட்சிக்காக பொது அபேட்சகராக முன்வந்த தனக்கு பின்னால் ஒரு நிழலாக இருந்து அவர் வழங்கிய பலத்தையும் மிக நெருங்கிய அரசியல் நண்பராக இருந்து நிறைவேற்றிய வகிபாகத்தையும் ஜனாதிபதி இதன்போது நன்றியுடன் நினைவு கூர்ந்தார்.

திருகோணமலை அபிவிருத்தி பற்றி கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கம் இதற்காக விரிவான நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.

மாவட்டத்திலுள்ள குளங்களை புனரமைப்பதற்காக ஜனாதிபதி அலுவலகத்தினூடாக விசேட நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதுடன், இதனூடாக அதிகளவு குளங்களை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வடமேல் பாரிய வாய்க்கால் நிர்மாணப் பணிகள் இம்மாதம் 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், தற்போது வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ள மொரகஹகந்த - களுகங்கை நீர்த்தேக்கத் திட்டத்தின் ஊடாகவும் திருகோணமலை நகர மக்களின் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவசாயத் துறை சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும் என்றார்.

வடக்கு, கிழக்கு உள்ளூராட்சி சேவைகளை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள கந்தளாய் நகர மண்டபத்தை ஜனாதிபதி மக்களிடம் கையளித்தார். இதற்காக 83 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன், இரண்டு மாடிகளைக் கொண்ட நகர மண்டபத்தில் மேல்மாடியில் 1000 இருக்கைகளைக் கொண்ட கேட்போர் கூடமொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள 09 நீர் சுத்திகரிப்பு முறைமைகளையும் தொலையியக்கி தொடர்பாடல் தொழில்நுட்ப உதவியுடன் மக்களிடம் கையளித்தார். மாவட்டத்திலுள்ள 160 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 05 பேருக்கு நியமனங்களை வழங்கினார்.

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம, அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சேருவில தொகுதி அமைப்பாளர் நளின் குணவர்தன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் திருகோணமலை தொகுதி அமைப்பாளர் ஆரியவதி கலபதி ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Comments