நல்லூர்க் கந்தன் வருடாந்த உற்சவம் | தினகரன் வாரமஞ்சரி

நல்லூர்க் கந்தன் வருடாந்த உற்சவம்

ஈழத்திலே நல்லூர் என்ற பெயரிலே ஐந்து கிராமங்கள் உள்ளன. அவற்றிலே யாழ்.நகரத்திலிருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் அமைந்துள்ள நல்லூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம். 12 ஆம் நூற்றாண்டு முதல் 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகராகவும், இலங்கையின் வடபகுதியிலுள்ள தமிழர்களின் இராசதானியாகவும் விளங்கியது நல்லூர்.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு “குருக்கள் வளவு” என்ற காணியில் 884 ஆம் ஆண்டளவில் கட்டியதாக கைலாய மாலை எனும் நூல் கூறுகிறது.

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைப் புவனேகபாகு தான் கட்டினான் என்பதற்கு ஆதாரமாக கைலாயமாலையில் வெளிவந்த பின்வரும் செய்யுளைக் குறிப்பிடலாம்” இலகிய சகாத்த மெண்ணுற் றெழுபதா மாண்ட தெல்லை அலர் பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு நலமிகும் யாழ்ப்பாணத்து நகரிகட்டுவித்து நல்லைக் குலவிய கந்த வேட்குக் கோயிலும் புரிவித்தானே ” ஆதியில் ஆலயத்தை நிர்மாணித்த ஆரியச் சக்கரவர்த்தியின் பிரதம மந்திரி புவனேகபாகு தற்போதும் மஹோற்சவ காலங்களில் கட்டியம் கூறும் போது ஆசிர்வதிக்கப்படுகின்றார். பதினாறாம் நூற்றாண்டின் நடுப் பகுதியான 1560 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் 1200 பேரைக் கொண்ட போர்த்துக்கீசக் கப்பற்படையினர் யாழ்ப்பாணக் களப்பில் வந்திறங்கினர்.

குறித்த கப்பற் படையினர் கரையில் நின்ற தமிழ்ப் படையுடன் போரிட்டு வென்று யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரான நல்லூர் இராசதானியைக் கைப்பற்றினர்.

இதனையடுத்து யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டு வந்த சங்கிலிய அரசன் அங்கிருந்து ஒழிந்தோடியதாகவும், பின்னர் போர்த்துக் கீசப் படையினர் சங்கிலிய அரசனுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டதாகவும் வரலாறு.

சங்கிலிய அரசன் போர்த்துக் கீசரைப் பொருட்படுத்தாது செயற்படுவதை அறிந்த அந்திர பூர்த்தாடு தே மென்டோன்சா எனும் பெயர் கொண்ட தளபதி 1591 ஆம் ஆண்டு கொழும்புத் துறைமுகத்தில் பெரிய கப்பற் படை சகிதம் வந்திறங்கினர். யாழ்ப்பாணத்து அரசருடைய படை வீரர்கள் எதிர்த்துப் போராடிய போதும் பலனில்லாத சூழலில் குறித்த படை இலங்கை வந்தடைந்த இரண்டு நாட்களிலேயே நல்லூரை முற்றுகையிட்டது.

இந்த முற்றுக்கைக்கெதிராக யாழ்ப்பாணத்து அரசனின் படை வீரர்கள் மட்டுமன்றி கோயிற் பூசகர்கள், தமிழர்கள் ஆகியோரும் வெகுண்டெழுந்து போரிட்டனர்.

இந்தப் போரிலே நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தையும், ஏனைய சைவ ஆலயங்களையும் பாதுகாப்பதற்காகப் பலரும் தங்கள் உன்னதமான உயிர்களைத் தியாகம் செய்ய வேண்டியேற்பட்டது.

இதன் பின்னர் கொழும்பிலிருந்து போர்த்துக்கீசத் தேசாதிபதியின் கட்டளையின் பேரில் பிலிப்தெ ஒலிவேறா எனும் தளபதி யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியதுடன், அரசனையும் சிறைப்பிடித்தான்.

1621 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்- 02 ஆம் திகதி நல்லூரை ஆக்கிரமித்து நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் இருந்த இடம் தெரியாமல் தரைமட்டமாக்குமாறு தனது படை வீரர்களுக்குப் பணித்ததன் பேரில் ஆலயம் முற்றுமுழுதாக இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது.

போர்த்துக்கீசத் தளபதியின் மிலேச்சத்தனமான செயல் கண்டு நல்லூர் ஆலயத்தைச் சூழவிருந்தவர்கள் பெரும் துயரடைந்தனர். கோயிலை அழியவிடாமல் தடுக்க கேட்பவற்றையெல்லாம் தருவதாகக் கெஞ்சினர். மன்றாடினர். ஆனாலும், போர்த்துக்கீசத் தளபதி இவற்றையெல்லாம் பொருட்படுத்தவில்லை.

போர்த்துக்கீசர் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தைத் தரமட்டமாக்கிய போதும் சைவப் பெருமக்களின் உள்ளத்திலிருந்து அவர்களால் நல்லூர்க் கந்தன் வழிபாட்டையும், எல்லாம் வல்ல முருகப் பெருமானின் நாமத்தையும் அழிக்க முடியவில்லை.

1658 ஆம் ஆண்டு ஜூன் மாதம் போர்த்துக் கீசர் வசமிருந்த யாழ்ப்பாண மாவட்டம் ஒல்லாந்தர் வசமானது. ஒல்லாந்தர் தமது கிறிஸ்தவ மதத்தைப் பரப்புவதிலும், தேவாலயங்களை நிறுவுவதிலும் ஆர்வம் காட்டினர்.

இதன் ஒரு கட்டமாக நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் முன்னரிருந்த இடமாகிய யமுனாரிக்கு அருகில் தேவாலயம் நிர்மாணிக்கப்பட்டது.

ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலும் சமய வழிபாட்டுச் சுதந்திரம் காணப்படாமையால் ஆலயத்தைப் பெரிதாக நிர்மாணிக்காமல் 1734 ஆம் ஆண்டில் நல்லூர்க் கந்தசுவாமி ஆலயம் ஏற்கனவே இருந்த இடமாகிய யமுனாரிக்கு அருகில் சிறியதொரு மடாலயம் அமைத்துப் பக்தர்கள் வேலை வைத்து அமைதியான முறையில் வழிபாடாற்றி வந்தார்கள்.

போர்த்துக்கீசரால் இடிக்கப்பட்ட நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தை இரகுநாத மாப்பாண முதலியார் 1734 ஆம் ஆண்டு ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தில் கற்களினாலும், செங்கற்களினாலும் மீளவும் அமைத்தார். இது தொடர்பில் “யாழ்ப்பாண வைபவ மாலை” நூலிலும் கூறப்பட்டுள்ளது.

திருவிழா உபயகாரர்களின் வருகையையோ,நாட்டின் தலைவர்கள், அரசியல் வாதிகள், பிரபலங்கள் ஆகியோரின் வருகையையோ எதிர்பார்த்து ஆலயத்தின் வழமையான பூசைகள் மற்றும் விசேட உற்சவங்களை பின்படும் வழக்கம் இந்தக் கோயிலில் அறவே கிடையாது.

ஒரு ரூபாவுக்கு அர்ச்சனை இடம்பெறும் ஆலயம் இந்த ஆலயமாகும். இது ஈழத்து ஆலயங்களில் வேறெங்கும் காண முடியாத தனிச் சிறப்பெனலாம்.

ஈழத்தின் தலை சிறந்த சித்தர்களான செல்லப்பா சுவாமிகளும், அவரது சீடரான யோகர் சுவாமிகளும் தடம் பதித்த புண்ணிய திருக் கோயிலாக நல்லூர்க் கந்தன் ஆலயமும், திருவீதியும் திகழ்கிறது.

இவ்வாலயத்தின் மூலஸ்தானத்திலே முருகப் பெருமானின் திருவுருவம் வைக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக முருகப் பெருமானின் ஞான சக்தியாகிய வேலே பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளது. ஆலயத்தைச் சூழ இலங்கையிலேயே ஒரேயொரு சைவ ஆதீனமாகத் திகழும் நல்லூர் திருஞானசம்பந்தர் ஆதீனம், நல்லூர் ஆறுமுக நாவலர் மணி மண்டபம், நல்லூர் அறுபத்து மூன்று நாயன்மார் குருபூசை மடம், நல்லூர் துர்க்கா மணி மண்டபம், நல்லூர் நடராஜர் பரமேஸ்வரன் மணி மண்டபம் ஆகிய பல மடங்களும், மண்டபங்களும் காணப்படுகின்றன.

Comments