ஆணுக்கு இல்லாத அடையாளம் | தினகரன் வாரமஞ்சரி

ஆணுக்கு இல்லாத அடையாளம்

ஆணை மையப்படுத்திய அடையாளம் ஆணைத் தொடர்புபடுத்தித்தான் பெண் அறியப்பட வேண்டும் என்பது எல்லா இடங்களிலும் தொடர்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் பாஸ்போர்ட் எடுப்பதற்குச் சென்றபோது, திருமணச் சான்றிதழ் கேட்டார்கள். எங்கள் வீட்டு ஆண்கள் அப்படி எதையும் சமர்ப்பிக்காத போது, பெண்கள் மட்டும் ஏன் அவர்களின் திருமணச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்? இப்போது பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் மாறுதல் வந்ததாகச் சொல்கிறார்கள், தெரியவில்லை.

இதே போலத்தான் பெயர் எழுதும்பொழுது ஆணுக்கு எப்பொழுதும் Mr. தான். திருமணம் ஆனவர், ஆகாதவர் எல்லோருக்கும் Mr. என்ற ஒன்றுதான். பெண் என்றால் பெயர் எழுதுபவர்கள், தாலி இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இல்லை என்றால் Miss, Mrs. இரண்டில் எதுவென நம்மிடமே கேட்பார்கள். Ms. என்று போடலாம் என்பதைச் சொல்லிப் புரியவைக்க வேண்டியுள்ளது. இதேபோல் தமிழிலும் ஆண்களுக்கு ‘திரு’ என்று போட்டுவிடுகிறார்கள். பெண்களுக்கு ‘செல்வி’ போடுவதா, ‘திருமதி’ போடுவதா என்று குழப்பம்.

கணவனை இழந்த பெண்ணை விதவை என்கிறார்கள். மனைவியை இழந்த கணவன் நிலையைக் குறிப்பிடுகையில், மனைவியை இழந்தவர் என்று குறிப்பிடுகிறார்கள்.

திருமணம் ஆன பெண்களுக்கான சின்னமான தாலி, மெட்டி, தலை வகிட்டுச் செந்தூரம் இவை எல்லாம் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று எண்ணும் சமூகம், ஆணுக்கு ஏன் இந்த வரையறைகளை விதிப்பதில்லை. பழங்காலத்தில் ஆண்களுக்கு மெட்டி இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் திருமணத்தின் போது ஆண்களுக்கு மெட்டி அணிவித்தாலும் அதை அவர்கள் சம்பிரதாயம் முடிந்ததும் கழற்றி எரிந்து விடுகிறார்கள். பெண் மட்டும் அதை தொடர்ந்து அணிந்திருக்க வேண்டுமாம்.

திருமணம் என்பது ஆண், பெண் இருவருக்குமான ஒப்பந்தம். ஆனால், இந்த ஒப்பந்த விதிகள் எல்லாம் ஏன் பெண்களுக்கு மட்டுமே அடையாளங்களைக் கடைப்பிடிக்கச் சொல்கின்றன?

பொட்டு வைத்தால் பிடிக்கும் என்ற பெண், கணவனை இழந்தால் பொட்டு வைக்கக் கூடாது என்று

நினைக்கிறது சமூகம். பொட்டு வைக்கப் பிடிக்காத பெண்ணை, திருமணம் ஆனால் பொட்டு வைத்தே தீர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. பூ வைப்பதும் பொட்டு வைப்பதும் தனி மனித விருப்பம். ஆனால், கணவன் இறந்தவுடன் இவற்றை இழக்க வேண்டும் என்பது என்ன நியாயம்? சட்டத்தில் சமம் என்கிறோமே தவிர, நடைமுறையில் அடையாளங்களைச் சுமக்க வேண்டியுள்ளது.

சட்டத்தில் இல்லாததை அரசு அதிகாரிகள் வலியுறுத்துவது எதனால்? காலம் காலமாக நமக்குள் ஊறிப்போயிருக்கும் மதிப்பீடுகள் தான் இதற்குக் காரணம். அரசு அலுவலர்களும் இந்தச் சமூகத்தின் ஒரு அங்கம்தானே.

மாற்றம் எப்படி வரும்? இதனை வெறுமனே அரசாங்க கடிதங்களால் மட்டும் சரிசெய்துவிட முடியாது. அனைவரது மனோபாவத்திலும் மாறுதல் வர வேண்டும். அண்மைக் காலமாகப் பொதுப் பிரச்சினைகளில் மக்கள் பங்கேற்பும் அறச் சீற்றமும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன. ஆனால், நான்கு போரோடு சேர்ந்து போராடத் தயாராக இருப்பவர்கள்கூட, தனி மனித விஷயங்களில் இந்த அறச்சீற்றத்தைக் கடைப்பிடிக்கத் தயங்குவது ஏன்? சட்டங்களில் மாற்றம் வருவதும் அமுலாக்கத்தில் மாற்றம் வருவதும் நம் முயற்சியில்தான் இருக்கிறது. அதிலும் பெண்கள் தொடர்பான விஷயங்களில் மாற்றம் ஏற்பட பெரிதும் போராட வேண்டியிருக்கும்.

அரசு அலுவலகங்களில் இதே ஆணாதிக்க மனோபாவத்தைப் பிரதிபலிக்கும் சட்டங்களோடும், அன்றாட நடைமுறைகளோடும் சீற்றம்கொள்வோம். இனிஷியலில் பெண் பெயர் போடுவது போல், இதுவும் நம் சமூக அந்தஸ்தை நிலைநிறுத்திக் கொள்வதற்கான போராட்டமே. அரசு ஊழியர் தொடங்கி அதிகாரிகள் வரை உள்ள ஆண், பெண் அனைவரின் மனோபாவத்துக்கு எதிராகப் போராடுவோம்.

இப்படியெல்லாம் செய்யவில்லை என்றால், என்ன மாற்றம் முன்மொழியப்பட்டாலும் எதுவும் மாறாது. சட்டமும் மனிதர்களும் பெண்களை இரண்டாம் இடத்தில் வைத்திருக்கும் நிலைப்பாடே தொடரும். அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. அதை அவர்கள் நம்புகிறார்கள்; நம்புவதை அமல்படுத்துகிறார்கள். ஆனால், மாற்றத்தை விரும்பும் நாம் என்ன செய்கிறோம்? அதிகாரம் அவர்கள் வசம் இருப்பதால், காரியம் முடிந்தால் சரி என்று நாம் நம்பும் கொள்கைகளைக் காற்றில் பறக்க விடுகிறோம். மாறாக மாற்றத்தை நோக்கி முதல் அடியை எடுத்துவைப்போம்.

Comments