நஷ்டத்தை ஈடுசெய்பவர்கள் யார்? | தினகரன் வாரமஞ்சரி

நஷ்டத்தை ஈடுசெய்பவர்கள் யார்?

இலங்கையின் ரயில்வே திணைக்களத்தைச் சேர்ந்த சில தொழிற்சங்கங்கள் கடந்த புதன்கிழமை (08.08.2018) பிற்பகல் முதல் திடீரென வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையில் குதித்தன. எவ்வித முன்னறிவித்தலுமின்றியே இவ்வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. “அரசாங்கம் தமக்கு அளித்த சம்பள முரண்பாட்டு தீர்வு வாக்குறுதியை நிறைவேற்றத் தவறி விட்டது. அதனால் தாம் வேலைநிறுத்தத்தை ஆரம்ப்பிப்பதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு குறிப்பிட்டிருக்கின்றது.

ஆனால் இத்திடீர் வேலைநிறுத்தம் காரணமாக ரயில் போக்குவரத்து பயணிகள் ஆரம்பம் முதல் பலத்த அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.

இந்நாட்டு மக்களுக்கு பயணிகள் போக்குவரத்து சேவை வழங்குவதில் ரயில்வே துறை இரண்டாவது இடத்தைப் பெற்று இருக்கின்றது. இச்சேவையைப் பயன்படுத்தி மாத்திரம் சுமார் ஐந்து இலட்சம் மக்கள் பல்வேறு தேவைகளின் நிமித்தம் தினமும் தலைநகரான கொழும்புக்கு வந்து செல்கின்றனர். இவர்களில் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களின் உத்தியோகத்தர்களும் அடங்குவர்.

அதேநேரம் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இச்சேவையைப் பாவிப்போரின் எண்ணிக்கை இன்னும் பல இலட்சங்களைத் தாண்டும். ரயில் போக்குவரத்து சேவையைக் குறிப்பிடத்தக்களவு பாடசாலை மாணவர்களும் பயன்படுத்துகின்றனர். இந்நாட்டில் இச்சேவையைப் பாவிப்பவர்களில் பெரும்பகுதியினர் ரயில்வே பருவச்சீட்டை பயன்படுத்துபவர்களாவர்.

இருந்த போதிலும் இவை எதனையும் கருத்தில் கொள்ளாமல் தான் இத்தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டன. அதாவது தமது சம்பள அதிகரிப்பு கோரிக்கைக்காக மக்களை பணயக்கைதிகளாகவும் கேடயங்களாகவும் பயன்படுத்தியே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. ஆனால் தம் கோரிக்கையை அடைந்து கொள்வதற்காக அப்பாவி மக்களை பணயக்கைதிகளாகவோ, கேடயங்களாகவோ பாவிப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

அதேநேரம் ரயில்வே ஊழியர்களில் சில பிரிவினரின் சம்பளம் சாதாரண மட்டத்தில் இல்லை. அவை இலட்சங்களைத் தாண்டிக் காணப்படுகின்றது. அப்படி இருந்தும் கூட சம்பளம் போதாது என்றே கோரிக்கை தான் இவ்வேலைநிறுத்தத்தின் அடிநாதமாக உள்ளது.

இவர்களது வேலைநிறுத்தம் காரணமாக மக்கள் அசௌகரியங்களுக்கு உள்ளாவதைத் தவிர்ப்பதற்கும் குறைப்பதற்கும் அரசாங்கம் உச்ச அளவு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. குறிப்பாக வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு கடமைக்கு திரும்புமாறும், பேச்சுவார்த்தைக்கு வருமாறும் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ள தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அரசாங்கம் ரயில் பயணிகளின் நலனகளைக் கருத்தில் கொண்டு 2000க்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளையும் சேவையில் ஈடுபடுத்தியுள்ளது.

இதேவேளை ரயில் பயணிகளின் நலன் கருதி பஸ்போக்குவரத்து சேவையை நடாத்த விரும்பும் தனியார் பஸ் உரிமையாளர்களை உடனடியாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் பதிவு செய்து கொள்ளுமாறும் ரயில் பருவச்சீட்டு கொண்டுள்ள பயணிகளுக்காக இலவச சேவையை மேற்கொள்ளுமாறும் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர கேட்டுள்ளார். அவ்வாறு சேவை நடாத்தும் போது ஏற்படும் செலவுகளை நிதியமைச்சு பெற்றுத்தரும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

இவை இவ்வாறிருக்க, ரயில்வே திணைக்களமும் ரயில் பயணிகளின் அசௌகரியங்களைக் குறைப்பதற்காக பயணிகள் ரயில் சேவையை நடாத்துவதற்கான உச்சபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஓய்வு பெற்ற ரயில்வே சாரதிகள் உள்ளிட்ட ரயில் ஊழியர்களையும் கடமைக்கு அழைத்துள்ளது. இதனடிப்படையில் சில பிரதேசங்களுக்கு ரயில் சேவைகளும் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெறுகின்றன. என்றாலும் மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்கவே செய்கின்றனர்.

இவ்வாறான நிலையில், “இவ்வேலைநிறுத்தம் காரணமாக ரயில்வே திணைக்களத்திற்கு 770 கோடி ரூபா நேற்று முன்தினம் வரை நஷ்ட்டம் ஏற்பட்டிருப்பதாக போக்குவரத்து துறை பிரதியமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்திருக்கின்றார். இது ரயில்வே திணைக்களத்திற்கு மாத்திரம் வேலைநிறுத்தத்தின் ஆரம்ப இரண்டொரு நாட்களில் ஏற்பட்ட நஷ்ட்டமாகும்.

ஆனால் கடந்த வியாழக்கிழமை முதல் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் கடமைக்கு வருகைதரும் ஊழியர்களில் பெரும் வீழ்ச்சியை அவதானிக்க முடிகிறது. அதனால் அரச மற்றும் தனியார் துறையின் சேவைகளில் தாமதங்களும் வீழ்ச்சியும் ஏற்பட்டுள்ளன. அத்தோடு இவ்வேலைநிறுத்தத்தினால் அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வருகைதரும் பொதுமக்களால் உரிய நேர காலத்தில் உரிய அலுவலகங்களுக்கு சென்றடைய முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்ற அதேநேரம் அவர்கள் எதிர்பார்த்து செல்லும் சேவைக்கு பொறுப்பான உத்தியோகத்தர்கள் கடமைக்கு வந்திராத அசௌகரியங்களுக்கும் கூட முகம் கொடுக்கின்றனர்.

இவ்வேலைநிறுத்தத்தின் விளைவாக ரயில்வே திணைக்களத்திற்கு மேலதிகமாக ஏனைய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் முகம் கொடுத்துள்ள நஷ்டங்களும் இன்னும் பல கோடிகளைத் தாண்டும்.

இதன்படி இவ்வேலைநிறுத்தம் காரணமாக முழு நாடும் பல கோடி ரூபா பெறுமதியான நஷ்ட்டத்திற்கு முகம் கொடுத்திருக்கின்றது. இந்த நஷ்ட்டத்தை ஈடுசெய்வது எவ்வாறு? அதனைப் பொறுப்பேற்க வேண்டியவர்கள் யார்? இவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும். ஏனெனில் அவரவர் நலன்களுக்காக நாட்டை நஷ்ட்டத்திற்குள் தள்ள முடியாது.

வேலைநிறுத்தம் செய்வது ஜனநாயக உரிமை என்பதில் ஐயமில்லை. அந்த உரிமையைப் பயன்படுத்தி மக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தி நாட்டுக்கு நஷ்ட்டத்தை ஏற்படுத்த முடியாது. அதனை ஜனநாயகமும் அங்கீகரிக்காது.

அதேநேரம் 2015 இல் பதவிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மீள உறுதிப்படுத்தியது. இதனைப் பயன்படுத்தித்தான் இத்தொழிற்சங்கங்கள் நாட்டுக்கும் மக்களுக்கும் நஷ்டத்தை ஏற்படுத்தி அசௌகரியங்களைத் தோற்றுவித்திருக்கின்றன. ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்பட்டதா? அவ்வாறு மேற்கொள்ளப்பட்டால் என்ன நடக்கும்? என்பதை யாவரும் அறிவர். இதனை தொழிற்சங்கங்களும் அறியாதவை அல்ல.

என்றாலும் இவ்வரசாங்கம் மீளப்பெற்றுத் தந்துள்ள ஜனநாயக சுதந்திரத்தைப் பயன்படுத்தி அவ்வரசாங்கத்திற்கு எதிராக இவ்வாறான வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதற்கு பின்நோக்கம் இல்லாமல் இருக்காது. சிலரது அற்ப நலன்களுக்காகவே மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வகையில் இவ்வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் ஊடாக மக்கள் மத்தியில் அரசாங்கத்திற்கு எதிரான பார்வையை தோற்றுவிக்கவும், அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்தவும் முயற்சிக்கப்பட்டிருகின்றது. இவற்றை மக்கள் அறியாதவர்கள் அல்லர்.

ஏனெனில் இவர்களது சம்பள முரண்பாடானது மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கும் வேலைநிறுத்தங்களை மேற்கொண்டு தீர்வு பெறக்கூடிய விடயமல்ல. இது பேச்சுவார்த்தை கலந்துரையாடல்களின் ஊடாகத் தீர்வு பெற்றுக்கொள்ளக்கூடிய விடயம். அதேநேரம் இவ்வரசாங்கம் எந்தவொரு விடயத்தையும் சர்வாதிகாரக் கண்கொண்டு அணுகியது கிடையாது. எல்லாவிடயங்களையும் மனிதாபிமானக் கண்ணோட்டத்தோடு அணுகும் அரசாங்கமே இது. இதற்கு 2015 பிற்பட்ட இவ்வரசாங்கத்தின் ஆட்சிக்காலம் நல்ல எடுத்துக்காட்டமாகும்.

ஆகவே, தொழிற்சங்கங்கள் நாட்டினதும் மக்களினதும் நலன்களை முன்னிலைப்படுத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்கும் மக்களின் சுபீட்சத்திற்கும் பங்களிக்க வேண்டிய பொறுப்பு தொழிற்சங்களுக்கும் உள்ளது. அதனால் ரயில்வே தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சகல தொழிற்சங்கங்களும் தம் கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து செயற்படத் தவறக்கூடாது. அதனால் மக்களை அசௌகரியங்களுக்கு உள்ளாக்கியுள்ள வேலைநிறுத்தத்தைக் கைவிட்டு ரயில்வே ஊழியர்கள் உடனடியாகக் கடமைக்கு திரும்ப வேண்டும். தம் கோரிக்கைகள் தேவைகள் குறித்து பேச்சுவார்த்தை கலந்துரையாடல்கள் மூலம் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிப்பதோடு அற்ப அரசியல் நலன்களை அடைந்துகொள்ள முயற்சிப்பவர்களின் பகடைக்காய்களாகவோ அவர்களுக்கு ஏணிகளாகவோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அமைந்து விடக்கூடாது. அதுவே மக்களின் எதிர்பார்ப்பும் கூட.

Comments