காணாமல் போனோர் அலுவலக அமர்வு எமக்கு நம்பிக்கை இல்லை | தினகரன் வாரமஞ்சரி

காணாமல் போனோர் அலுவலக அமர்வு எமக்கு நம்பிக்கை இல்லை

எஸ். றொசேரியன் லெம்பேட், வாஸ் கூஞ்சே

 

-காணாமற்போனோர் அலுவலகத்தின் மீது நம்பிக்ைக வைத்து ஒத்துழைக்குமாறு அந்த அலுவலகத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், தமக்கு இந்த அலுவலகத்தின் மீது எந்தவித நம்பிக்ைகயும் இல்லை என்று காணாமற்போனோரின் உறவினர்கள் நேற்று மன்னாரில் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டோர் விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக எத்தனை குழுக்கள் நியமிக்கப்பட்டாலும், எத்தனை அலுவலகங்கள் திறந்தாலும் அந்தக் குழுக்கள், அலுவலகங்களில் தமக்கு நம்பிக்கை இல்லை என அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் அதன் பிராந்திய மட்ட விசாரணைகளை நேற்று (12) முதல் கட்டமாக மன்னாரில் ஆரம்பித்துள்ளது.

இந்த அலுவலகத்தின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தலைைமயில் 7 ஆணைக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு விசாரணைகளை நடத்தியபோதே மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டத்தில் காணா மல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களிடம் கருத்துகள் பெற்றுக்ெகாள்ளப்பட்டதைத் தொடர்ந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களிடமும் கருத்து பெறப்பட்டது. இறுதியாக ஊடகச் சந்திப்பு நடைபெற்றது.

-எனினும், தம்மிடம் கருத்துக்கள் மற்றும் அலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் போது மண்டபத்தில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்பட வேண்டும். அனுமதிக்கும் பட்சத்தில் தாம் கலந்து கொண்டு கருத்துக்கள் மற்றும் அலோசனைகளை வழங்க முடியும் என மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த மண்டபத்தினுள் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் அனுமதிக்கப்பட்டனர்.

--இதன் போது கருத்துக்களை வழங்கிய காணாமல் ஆக்கப்பட்டோர் மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள்,

-எமது உறவுகள் தொடர்பாக நாங்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தோம். அவர்களைக் கண்டறிய அரசுக்கு நாம் தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுத்து வந்தோம். ஆனால் எந்த அழுத்தமும் பயனளிக்கவில்லை.

-எமது உறவுகளைத் தேடித் தினம் தினம் அலைந்து திரிகின்றோம்.பல்வேறு முகாம்களுக்கும் தேடிச் சென்றோம்.

-கடந்த காலம் தொட்டுத் தற்போது வரை எமது வீடுகளுக்குப் புலனாய்வுத்துறையினர் வந்து விசாரிக்கின்றனர்.

-எங்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர். எத்தனையோ ஆணைக்குழுக்களிடம் நாங்கள் முறைப்பாடுகளைச் செய்து விட்டோம்.

இதுவரை எமக்கு எவ்வித முடிவும் இல்லை. எமது உறவுகள் காணாமல் போனவர்கள் அல்லர். பலவந்தமாகக் காணாமல் ஆக்கப்பட்டவர்களாவர்.

அவர்களை வீடுகளில் வைத்தும், வீதிகளில் வைத்தும் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்துக் கடத்தியுள்ளனர்.

இன்று நல்லாட்சி அரசு ஏற்பட்டும் எமது உறவுகளுக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை.

இலங்கையில் காணாமல் போனவர்கள் என்று யாரும் இல்லை என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.அப்போது எமது பிள்ளைகளையும்,உறவுகளையும் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களா கடத்திச் சென்றுள்ளனர்? என உறவுகள் கண்ணீர் மல்க கேள்வி எழுப்பினர்.

-தொடர்ந்தும் காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவுகள் பல்வேறு விதமான கருத்துக்களை வழங்கினர். பல்வேறு பெண்களைப் புலனாய்வுத்துறையினர் வீடுகளுக்குச் சென்று அச்சுறுத்துவதாகவும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான போராட்டங்களில் கலந்து கொள்ளக்கூடாது எனத் தம்மை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்தனர்.

இதன் போது பதில் வழங்கிய காணாமல் போனவர்களுக்கான ஆணைக்குழுவின் தலைவர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், புலனாய்வாளர்கள் உங்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டால் எமக்கு முறையிட்டால், உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் எனவும், அதற்கான அதிகாரம் தமக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

எனினும், தமக்குக் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் தொடர்பில் நம்பிக்கை இல்லை எனவும், குறிப்பாக 'காணாமல் போனோர்' என்ற வசனத்தை 'காணாமல் ஆக்கப்பட்டோர்' என்று மாற்றக் கோரி கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக கோரிக்கை விடுத்திருந்தோம்.

ஆனால், இன்றுவரை மாற்றப்படவில்லை. எனவே, மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த காணாமல் ஆக்கப்பட்ட, கடத்தப்பட்டவர்கள் சார்பாகத் தமக்குக் காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் தொடர்பில் நம்பிக்கை இல்லை என பகிரங்கமாக தெரிவித்தனர்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கடத்தப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டதோடு, காணாமல் போனவர்களுக்கான அலுவலகம், அதன் பிராந்திய மட்ட ஆலோசனை நடவடிக்கைளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகப் பதாதைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

 

Comments