அரசியல் சிக்கலில் அமுங்கி போன அரசியல் யாப்பு! | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் சிக்கலில் அமுங்கி போன அரசியல் யாப்பு!

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தென்னிலங்கை அரசியலில் ஏற்படுத்தியிருக்கும் பெரும் பரபரப்பு ஒருபுறமிருக்க, சிறுபான்மை இனங்களுக்கு அரசியல் அதிகாரப் பகிர்வை வழங்குவதற்கான உத்தேச அரசியலமைப்பின் எதிர்காலம் இப்போது அவநம்பிக்கைக்கு உரியதாகிப் போயுள்ளது.

நாட்டின் தேசிய அரசியலை நோக்கியே இப்போது அனைவரின் கவனமும் குவிந்திருக்கின்றது. இலங்கையில் அடுத்த கணம் இடம்பெறப் போகும் அரசியல் மாற்றம் என்னவாக இருக்குமென்பதை எவராலுமே ஊகித்துக் கொள்ள முடியாதிருக்கின்றது. கூட்டரசாங்கத்தை அமைத்துக் கொண்டுள்ள இரு பிரதான கட்சிகளான ஐ.தே.கவும், சு.கவும் உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து அரசாங்கத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வதில் முழுக்கவனத்தையும் செலுத்தியமை காணக்கூடியதாக இருந்தது. ஆனால் அன்றைய அரசியல் காட்சி இப்போது முழுமையாக மாற்றமடைந்து விட்டது. இரு கட்சிகளும் தற்போது வேறு இலக்கை நோக்கிச் சிந்திக்கின்றன. தனியாக நின்று அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்பதே இரு கட்சிகளினதும் இன்றைய உள்ளூர திட்டம்!

எனவேதான் தென்னிலங்கை அரசியலில் இப்போது நாளும் பொழுதும் பரபரப்பு நிறைந்து விட்டது;

நல்லாட்சியின் பங்காளிகளான ஐ.தே.கவும் சுகவும் தத்தமது கட்சிகளை முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக நடத்திய போராட்டமானது இறுதியில் மஹிந்த தரப்புக்கே வாய்ப்பாகிப் போயுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் முடிவானது அரசுக்கு ஸ்திரமற்ற நிலைமையை ஏற்படுத்தியிருக்கிறது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் அரசுக்குப் பாதகமாக அமைந்திருக்கும் இந்நிலையில், சிறுபான்மையினங்களுக்கான அரசியல் தீர்வையிட்டோ அல்லது புதிய அரசியலமைப்பு குறித்தோ இனிமேல் சுதந்திரக்கட்சியோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியோ கவனம் செலுத்துமென எதிர்பார்க்க முடியாது. அவ்விரு கட்சிகளும் இப்போது அரசாங்கமொன்றை தனியாக அமைப்பதிலேயே கவனம் செலுத்துகின்றன.

மஹிந்த தரப்பினரைப் பொறுத்தவரை உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னரான அவர்களது மூன்று வருட கால அரசியல் பயணத்தில் இப்போது திருப்புமுனையொன்றை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தல் முடிவின் மூலம் எதிர்கால அரசியல் அவநம்பிக்கையிலிருந்து மஹிந்த தரப்பு மீண்டுள்ளதெனக் கூறுவதே மிகவும் பொருத்தம்.

இந்நிலையில், ஆட்சியை வீழ்த்தும் முயற்சிகளிலேயே மஹிந்த தரப்பினர் இனிமேல் முழுமூச்சாக கவனத்தைச் செலுத்துவரென்பதைக் கூற வேண்டிய அவசியம் கிடையாது. அதேசமயம் சிறுபான்மையினங்களுக்கான அரசியல் தீர்வை வழங்கக்கூடிய புதிய அரசியலமைப்பை நிராகரிப்பதன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் தமது செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கும் ராஜபக்ச தரப்பினர் இனிமேல் முற்படுவர். உத்தேச அரசியல் யாப்பை பிரிவினைக்கான ஆவணமென்று பிரசாரப்படுத்தியதன் மூலமே மஹிந்த தரப்பினர் சிங்கள மக்களின் செல்வாக்கை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

இதுவரை காலமும் இரு கட்சிகள் மாத்திரமே இருவேறு துருவங்களாகியிருந்த தென்னிலங்கை அரசியல் இப்போது மூன்று தனித்தனியான துருவங்களாகிப் போயுள்ளது. மூன்று கட்சியினரும் தத்தமது தரப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்காக நடத்தி வருகின்ற அரசியல் போராட்டங்களுக்கு மத்தியில், புதிய அரசியலமைப்பை உருவாக்கிக் கொள்வதற்கான அவசியத்தை இன்றைய சூழலில் எதிர்பார்க்க முடியாது. சிறுபான்மையினருக்கான அரசியல் தீர்வை உருவாக்கிக் கொள்வதைப் பார்க்கிலும் தமது கட்சிகளின் செல்வாக்கை வளர்ப்பதிலேயே தேசியக் கட்சிகள் இனிமேல் முழுமையான கவனம் செலுத்தப்போகின்றன.

இவ்வாறான அரசியல் சூழ்நிலையில் உத்தேச அரசியலமைப்பை செயலுருப்படுத்துவது சாத்தியமானதா என்பது இன்று எழுகின்ற பிரதானமான வினா!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் எதிர்காலத்தில் யாப்பு விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தாமல் விடப் போவதில்லை. தமிழினத்தின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளுக்குத் தீர்வைத் தரக்கூடிய புதிய அரசியலமைப்பொன்றை நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்படுத்திக் கொள்ள முடியுமென்ற உறுதிமொழியை முன்வைத்தே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது கடந்த மூன்று தேர்தல்களில் வடக்கு கிழக்கு மக்களிடம் ஆணையைக் கோரியது.

2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல், 2015 ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற பாராளுமன்றப் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் மாத்திரமன்றி, கடந்த 10ம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையான தமிழரசுக் கட்சி உத்தேச யாப்பையே தேர்தல் விஞ்ஞாபனமாக தமிழ் மக்கள் மத்தியில் முன்வைத்தது.

எனினும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் எதிர்பார்ப்புகள் மாறிப் போயிருக்கின்றன. கூட்டரசாங்கத்தின் செல்வாக்கு வீழ்ச்சியடைந்திருப்பதை தேர்தல் முடிவு வெளிக்காட்டுகின்றது. அதேசமயம் சிறுபான்மையினங்களுக்கான அரசியல் தீர்வை வழங்கக் கூடிய புதிய அரசியலமைப்பை நிராகரித்திருந்த மஹிந்தராஜபக்ச தரப்பு இத்தேர்தலில் வெற்றியடைந்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் அப்பால், புதிய அரசியலமைப்பை முன்னிறுத்தி பிரசாரங்களில் ஈடுபட்டு வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையான தமிழரசுக் கட்சிக்கும் உள்ளூராட்சித் தேர்தலில் குறிப்பிடக் கூடியளவு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தமிழ்க் கூட்டமைப்பு நம்பிக்கையுடன் சுட்டிக் காட்டுகின்ற புதிய அரசியலமைப்பு மீது தமிழ் இனத்துக்கு திருப்தி ஏற்படவில்லையா? அல்லது புதிய அரசியலமைப்பு மீது நம்பிக்கை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது தமிழினத்துக்கு அவநம்பிக்கை ஏற்பட்டு விட்டதா?

தமிழரசுக் கட்சிக்கு இத்தேர்தலில் ஏற்பட்டுள்ள பின்னடைவானது இத்தகைய சந்தேகங்களை எழுப்புவது தவிர்க்க முடியாததாகும்.

தேசிய அரசியலில் இடம்பெறப்போகின்ற மாற்றம் எதுவென்பதைப் புரிந்து கொள்ள முடியாதிருக்கும் இவ்வேளையில், புதிய அரசியலமைப்பைப் பற்றிய முக்கியத்துவம் மறைந்து போயிருப்பது நன்றாகவே தெரிகின்றது.

உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் உத்தேச அரசியல் யாப்பை செயலுருப்படுத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக் கொண்டிருக்கிறார்.

ஆனால் கூட்டமைப்பு பேச்சாளரான சுமந்திரன் வெளியிட்ட கருத்து வேறுவிதமானது. தேர்தல் முடிவுகளைப் பார்க்கின்ற போது, தமிழினத்தின் அரசியல் தீர்வுக்காக சர்வதேச சமூகத்தின் உதவிகளை நாடுவது தவிர்க்க முடியாததாக உள்ளதென்ற தொனியில் கருத்து வெளியிட்டுள்ளார் சுமந்திரன். இவ்விரு கருத்துகளுமே சாத்தியமற்றவையாகத்தான் தெரிகின்றன.

இனப்பிரச்சினைத் தீர்வு முயற்சியில் சர்வதேசம் மீதான நம்பிக்கையும், தென்னிலங்கை மீதான நம்பிக்கையும் தமிழினத்தின் நீண்ட காலத்தை வீணடித்திருக்கின்றன.

இவ்வாறான நிலையில், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான எந்தவொரு நம்பிக்கையையும் இப்போதைக்குக் காண முடியாதிருக்கிறது என்பதே உண்மை. 

Comments