பிரபாகரனிடம் இருந்தே நாம் யுத்தத்தை கற்றுக்கொண்டோம் | தினகரன் வாரமஞ்சரி

பிரபாகரனிடம் இருந்தே நாம் யுத்தத்தை கற்றுக்கொண்டோம்

இராணுவம் தவறு செய்யவில்லை என்று கூறுபவர் தளபதி பதவிக்கு தகுதியற்றவர்

வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்தே நாம் யுத்தத்தை கற்றுக்கொண்டோம். பிரபாகரன் ஒருவர் உருவாகியதன் காரணமாகவே பீல்ட் மார்ஷல் ஒருவர் உருவாகினார். பிரபாகரன் யுத்தகளத்தில் பலமாகும் போது நாமும் பலமாகினோம். பிரபாகரன் யுத்தம் ஆரம்பிக்கும்போது இராணுவத்தில் 10 ஆயிரம் பேரே இருந்தனர். தற்போதுள்ள பலமான இராணுவம் அப்போது இருந்திருந்தால் எம்மால் இரு வருடத்தில் யுத்தத்தை முடித்திருக்க முடியும். எனவே யுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இராணுவம் பலமாக இருக்க வேண்டும் என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார். அத்துடன் இராணுவ வீரர்கள் என்ற வகையில் எமக்கு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது. எனினும் அமெரிக்க இராணுவ தளபதி இங்கு நடக்கும் மாநாடொன்றுக்கு பிரதம அதிதியாக வருகின்றார். இதனை இப்படியே விட்டு சும்மா இருக்க முடியாது. இந்த நெருக்கடியில் இருந்து நாம் மீள வேண்டும். அதனை விடுத்து முட்டாள்தனமாக பேசிக்கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை 2018 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, நீதி அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

நாட்டின் பாதுகாப்பிற்காக படை யினர் பலர் உயிரை தியாகம் செய்தனர். அதனால் பலதை நாம் இழந்தோம். எனினும் இதனால் நாம் கவலை கொள்ளமாட்டோம். பாதுகாப்பு படையினர் நாட்டுக்கு கடன் இல்லை என்று சந்தோஷப்பட முடியும். ஏனெனில் நாட்டுக்கு செலுத்த வேண்டிய கடனை அவர்கள் தமது உழைப்பின் மூலம் வழங்கி விட்டனர். பாதுகாப்பு படையினருக்குள்ள பிரதான பொறுப்பு அரசியலமைப்பினை பாதுகாப்பதாகும். அவர்கள் அதற்கு முன்னின்று செயற்படுவர்.

முப்பது வருடம் யுத்தம் இருந்தது. அப்போது நாட்டில் பாதுகாப்பு இருந்ததாக நான் நினைக்கவில்லை. எனினும் யுத்ததை வெல்ல பாரிய சேவைகளை முன்னெடுத்தோம். பாதுகப்பு படைகளில் 99.5 வீதம் தேசப்பற்றுள்ளவர்கள் இருந்தனர். 5 வீதத்தினர் நாட்டை பற்றி சந்திக்காமல் சில குழுக்களின் பின்னால் பணத்திற்காக செயற்பட்டனர். இந்த யுத்தத்தினால் 30 ஆயிரம் பாதுகாப்பு படையினர் உயிரிழந்தனர். அதில் 28 ஆயிரம் பேர் தரைப்படையினராகும். 3000 பேர் ஊனமுற்றனர். எனவே இந்த ஒட்டு மொத்த படையினரின் உதவிகள் இன்றி எம்மால் வெற்றியடைந்திருக்க முடியாது. யுத்ததின் போது பாதுகாப்பு படையில் 3 இலட்சம் படையினர் இருந்தனர். அதில் 2 இலட்சம் பேருக்கு நானே தலைமை வகித்தேன். இலங்கையை பொறுத்தவரையில் 67 வருடம் பழைமையான இராணுவம் உள்ளது. எனினும் இராணுவத்துக்கு சர்வதேச தரம்வாய்ந்த பாதுகாப்பு செயல்முறை திட்டம் இல்லை. பாதுகாப்பு திட்டமில்லை. இராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். எதிர்காலத்தில் நாட்டுக்குள் பிரச்சினைகள் வரலாம். ஆகவே தற்போது படையினருக்கு உரிய இடம் வழங்க வேண்டும்.

கடந்த காலங்களை விடவும் பாதுகாப்புக்கு ஒதுக்கீடு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னைய ஆட்சியில் பாதுகாப்புக்கு நிதி ஒதுக்கிடுவதனை விடுத்து அதற்கு பதிலாக கொள்ளையிட்டனர்.

இராணுவத் தளபதி பதவிக்கு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் அவசியமாகும். ஒரு முறை இருந்தால் போதும் என்பவர்களை நியமிக்க கூடாது. பாதுகாப்பு செயலாளர் சிவில் நபர் இருக்க வேண்டும். அத்துடன் பாதுகாப்பு பல்கலைக்கழகமொன்றை உருவாக்க வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கடற்படையின் பலத்தை எவன்கார்ட் நிறுவனத்திற்கு வழங்கினர். ரத்னலங்க போன்ற நிறுவனத்தினால் அப்போதைய பாதுகாப்பு செயலாளர் வியாபாரம் செய்து ஊழல் செய்தார். இது போன்ற அனைத்து குற்றங்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும். குடும்ப அரசியல் செய்தவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

அதேபோன்று தற்போது வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்ற போவதாக கூறுகின்றனர். வடக்கும் கிழக்கு தெற்கிலும் இராணுவம் இருக்க வேண்டியது அவசியமாகும். எங்கு இராணுவம் இருக்க வேண்டும் என்பதனை இராணுவமே தீர்மானிக்கும். எக்காரணம் கொண்டும் இராணுவத்தை பலவீனப்படுத்த நாம் முனையவில்லை. நாடுபூராகவும் இராணுவ முகாம்கள் இருக்கும்.

அத்துடன் வேலுப்பிள்ளை பிரபாகரனிடம் இருந்தே நாம் யுத்ததை கற்றுக்கொண்டோம். பிரபாகரன் ஒருவர் உருவாகியதன் காரணமாகவே பீல்ட் மார்ஷல் ஒருவர் உருவாகினார். பிரபாகரன் யுத்தகளத்தில் பலமாகும்போது நாமும் பலமாகினோம். பிரபாகரன் யுத்தம் ஆரம்பிக்கும் போது இராணுவத்தில் 10 ஆயிரம் பேரே இருந்தனர். எனினும் தற்போது உள்ளவாறு பலமான இராணுவம் இருந்திருந்தால் நாம் இருவருடத்தில் யுத்தத்தை முடித்திருப்போம். எனவே யுத்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இராணுவம் பலமாக இருக்க வேண்டும். இராணுவத்தை பலவீனப்படுத்தினால் அது நாட்டுக்கு பாதிப்பாக அமையும்.

அத்துடன் இராணுவ வீரர்கள் என்ற வகையில் எமக்கு அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு செல்ல முடியாமல் உள்ளது. எனினும் அமெரிக்க இராணுவத் தளபதி இங்கு நடக்கும் மாநாடொன்று பிரதம அதிதியாக வருகின்றார். இதனை இப்படியே விட்டு சும்மா இருக்க முடியாது. இந்த நெருக்கடியில் இருந்து நாம் மீள வேண்டும். அதனை விடுத்து முட்டாள் தனமாக பேசி கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை.

இராணுவம் தவறு செய்யவில்லை என்று கூறுபவர் இராணுவத் தளபதியாக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவராகும். இராணுவத் தளபதி குற்றம் செய்திருந்தால் அது விசாரணை செய்ய வேண்டும். அதனை விடுத்து முட்டாள் தனமாக பேசி கொண்டிருப்பதனால் எம்மால் நெருக்கடிகளில் இருந்து மீள முடியாது என்றார்.

லக்ஷ்மி பரசுராமன் 

Comments