நிலமீட்பு போராட்டம்; அச்சுறுத்தும் கடற்படை | தினகரன் வாரமஞ்சரி

நிலமீட்பு போராட்டம்; அச்சுறுத்தும் கடற்படை

மன்னார் நிருபர்

தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி மன்னார், முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வரும் போராட்டம் நேற்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகவும் தொடர்ந்த போதும் கடற்படையினர் முகாமை விட்டு வெளியில் வந்து தொடர்ச்சியாக புகைப்படம் எடுத்து அச்சுறுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை கடற்படையினரால் அபகரிக்கப்பட்டு தற்போது முகாமாக மாறியுள்ள தமது நிலத்தை மீட்டு தங்களை மீளக்குடியேற்றம் செய்ய வலியுறுத்தி முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த வியாழக்கிழமை (23) காலை ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் நேற்று சனிக்கிழமை மூன்றாவது நாளாகவும் அமைதியான முறையில் நடைபெறுகிறது.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அருட்தந்தையர்கள்,மீனவ அமைப்புக்களின் பிரதிநிதிகள்,தொண்டு அமைப்புக்களின் பிரதி நிதிகள், மாகாண சபை உறுப்பினர் வைத்தியர் ஜீ.குணசீலன், மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ், மன்னார் பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் உட்பட பலர் நேரடியாக சென்று மக்களை சந்தித்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இருப்பினும், போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் மக்களை அவ்விடத்திலிருந்து வெளியேற்றும் வகையில் தொடர்ச்சியாக கடற்படையினர் செயற்பட்டு வருகின்றனர்.

இரவு நேரங்களில் புகைப்படம் எடுத்தல், வீதிக்கு முன் வந்து மக்களை புகைப்படம் எடுத்தல், கடற்படை முகாம் நுழைவாயிலில் அதிகளவிலான கடற்படையினர் ஒன்று கூடி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களை அவதானித்தல், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மக்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டம் இடம் பெறும் இடத்திற்கு வருகின்ற பிரதி நிதிகளை புகைப்படம் எடுத்தல்,அவர்களின் விபரங்களை பதிவு செய்தல் போன்ற நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கடற்படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் கடற்படையினர் எவ்வாறான அச்சுறுத்தல்களை தமக்கு கொடுத்தாலும் தாம் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனவும், நிலம் மீட்கப்படும் வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற முள்ளிக்குளம் மக்கள் தெரிவித்துள்ளனர். 

Comments