மணிப்புலவர் மருதூர்- ஏ.மஜீத்
ஈழத்தின் தென்கிழக்கு
இயற்கை அழகோடு
குழந்தைகளை
அழைக்கும் அழகு
ஆ! அற்புதம்
பொத்துவில்
பெண்கள்
குழந்தைகளை
வாங்கராசா!
என அன்போடு
அழைத்து மகிழ்வர்
அக்கரைப்பற்றில்
வா மணி!
என அழைத்து இன்புறுவர்
அட்டாளைச்சேனை
அதனருகே
பாலமுனை, ஒலுவில்
என மூன்று ஊர்களிலும்
வாச்சே!
என்றே அழைப்பர்
நிந்தவூரில்
வாச்சி!
வா மயில்!
என்று அழைக்கும்
வழக்குண்டு
இறக்காமம்
வரிப்பத்தாஞ்சேனை
இரண்டு ஊர்களிலும்
வா தங்கம்!
என தங்கமாய்
அழைத்து மகிழ்வர்.
சம்மாந்துறையில்
வா மன!
என்றழைப்பர்
நற்பட்டிமுனையிலே
பொத்துவிலைப் போல
வாராசா!
என்றே அழைப்பர்.
மருதூரில்
வா கிளி!
என்ற வழக்கம்
கல்முனை குடியிலோ
வா அழகு!
என்றழைப்பதுண்டு
மருதமுனையில்
வா வாப்பா!
வா தங்கம்!
என இரண்டு
சொற்களாலும்
பெண்கள்
குழந்தைகளை
அழைத்து மகிழ்வர்
தென்கிழக்கின்
எட்டுத்திக்கும்
‘கா’
என்ற சைக்கு
பஞ்சமேயில்லை
புள்ளலெக்கா!
புள்ளலெக்கா!
உண்ட புரிஷன்
எங்கே போனதுகா
என ஒருத்தி கேட்க
மற்றவளோ
கல்லூட்டுத் திண்ணையிலே
கதைத்திருக்கப் போனதுகா
எனக் கூறி
இருவருமே இன்புறுவர்
இதனை மொழி ஆய்வாளர்
தென் கிழக்கில்
பெண்கள் வாயிலும் ‘கா’
ஆண்கள் தோளிலும் ‘கா’
எனக் கூறி மகிழ்வர்
அழைப்பதிலும்
பெண்கள் அழகுதான்
தென்கிழக்கில்!